ஷாங்காய்: சீனாவில் உள்ள பள்ளிகளில் சுவாசம் தொடர்பான நோய் சிறுவர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதன் தொடர்பில் நோய் குறித்த தகவல்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம், வழக்கத்திற்கு மாறான அல்லது புதிய நோய்க் கிருமி எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளது.
சீனாவில் கொவிட்-19 நோய் தொடர்பிலான கட்டுப்பாடுகள் சென்ற டிசம்பர் மாதம் நீக்கப்பட்டன. அதன்பின், தற்பொழுதுதான் அங்கு முழுமையான குளிர்காலம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் வட பகுதிகளான பெய்ஜிங், லியவ்னிங் மாநிலம் ஆகிய இடங்களில் அதிக அளவிலான சிறாருக்கு சுவாசம் தொடர்பான நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த மாநில மன்றம் தற்போதைய குளிர், வசந்த காலங்களில் சளிக்காய்ச்சல் உச்சத்தை எட்டும் என்றும் வருங்காலத்தில் நிமோனியா எனப்படும் நெஞ்சுச் சளிக்காய்ச்சல் அதிகரிக்கக்கூடும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன், கொவிட்-19 கொள்ளைநோய் மீண்டும் தலைதூக்கலாம் என்றும் அது எச்சரித்தது.
“நேரத்துடனும் சரியான முறையிலும் தகவல் அளிக்கும் வகையில், அனைத்து பகுதிகளும் தொற்று நோய் குறித்த தகவல் தெரிவிப்பதை வலுப்படுத்த வேண்டும்,” என்று மாநில மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
உலக சுகாதார நிறுவனம் நிமோனியா காய்ச்சல் சிறார்களிடையே பரவி வருவதாகக் கூறப்படுவதை கவனத்தில் கொள்ளும் திட்டத்தின்கீழ் இதுபற்றிய கூடுதல் தகவல்களை சீனாவிடம் கேட்டது.
அதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறார்களிடையே அதிகரித்து வரும் நோய்த் தொற்றுக்கு கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே காரணம் என சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதுபோல் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபின் சளிக்காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.