வெலிங்டன்: எதிர்காலத் தலைமுறைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை, நியூசிலாந்தின் புதிய கூட்டணி அரசாங்கம் நீக்க முடிவு செய்துள்ளது.
வரிக் குறைப்புக்கு நிதி சேர்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர் கட்சியின் ஆட்சியில் அரசாங்கம் முன்னதாக இயங்கியபோது 2022ல் தடை குறித்து அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜனவரி 2009க்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட்டுகளை வாங்குவது சட்டவிரோதமாகும்.
உலகிலேயே இத்தகைய தடையை நடப்புக்குக் கொண்டுவரும் முதல் நாடு நியூசிலாந்து என்றும் நம்பப்பட்டது.
இந்தச் சட்டம் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்புக்கு வரும் என ‘த கார்டியன்’ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் சட்டம் ரத்து செய்யப்படும் என்று சனிக்கிழமையன்று (நவம்பர் 25) நியூசிலாந்தின் புதிய நிதி அமைச்சர் நிக்கோலா விலிஸ் அறிவித்தார்.
இந்நிலையில், ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்குக் குரல்கொடுக்கும் சமூகத்தினர் இம்முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

