வத்திகன்: போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தனக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகக் கூறி வழக்கமாக தனது ஞாயிறு உரையை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வழங்குவதற்கு பதிலாக தனது இல்லத்தில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தில் இருந்து வழங்கினார்.
அவருக்குப் பதிலாக அவரது உரையை உதவியாளர் ஒருவர் வாசித்தார்.
போப்பாண்டவர் ஃபிரான்சிஸ், வயது 86, தனது வலது கையில் கட்டுப்போட்டுக் கொண்டு வழக்கமான வெண்மை நிற ஆடை அணிந்து அமர்ந்திருக்க, அவர் அருகில் அமர்ந்து அவரது உரையை உதவியாளர் வாசித்தார்.
“எனது அருமை சகோதர, சகோதரிகளே, ஞாயிறு வாழ்த்துகள். எனக்கு நுரையீரல் தொற்று இருப்பதால், இன்று என்னால் மாடத்தில் இருந்து உங்களைக் காண்பது முடியாது,” என்று போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் கூறினார்.
முன்னதாக, போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் நவம்பர் 25ஆம் தேதி சளிக்காய்ச்சல் வந்தபின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டு தனக்கு நுரையீரல் தொற்று ஏதும் இல்லை என்று கூறியிருந்தார்.