சிட்னி: பருவநிலை தொடர்பான ஆர்ப்பாட்டம் நடத்தி ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நிலக்கரி துறைமுகத்தை முற்றுகையிட்ட 109 பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.
கைதானவர்களில் ஐந்து சிறுவர்களும் 97 வயது முதியவரும் அடங்குவர்.
கடந்த வாரயிறுதியில் நியூகாசல் துறைமுகத்தை ஒட்டிய கப்பல் பயணப் பாதையைப் பல படகுகளைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்தனர்.
படிம எரிபொருளைச் சார்ந்திருக்க வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து பலர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
30 மணி நேரத்துக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.
காலக்கெடு முடிந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தைவிட்டுச் செல்ல மறுத்ததை அடுத்து, காவல்துறைக்குச் சொந்தமான படகுகள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டன.

