கெய்ரோ: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டை நிறுத்தம் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சமரசப் பேச்சில் ஈடுபட்ட கத்தார் நவம்பர் 27ஆம் தேதி தெரிவித்துள்ளது.
இதனால் ஹமாசும் இஸ்ரேலும் அதிகமான பிணைக் கைதிகளையும் சிறைக்கைதிகளையும் விடுவிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
“அடுத்த இரண்டு நாட்களில் ஆக்கிரமிப்பு நாடு (இஸ்ரேல்) ஒப்பந்தத்தைக் கடைபிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர மற்றவர்களையும் விடுவிக்க ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்ய விரும்புகிறோம்,” என்று நவம்பர் 27ஆம் தேதி அன்று அல் ஜசிராவுக்கு அளித்த பேட்டியில் ஹமாஸ் அதிகாரி காலில் அல்-ஹாயா தெரிவித்தார்.
ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக அதிகமான பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவிக்கும் அறிகுறியை இஸ்ரேல் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஹமாசின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
நவம்பர் 27 வரை ஹமாஸ், 69 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது.
இம்மாதம் 24ஆம் தேதி சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. திங்கட்கிழமை சண்டை நிறுத்தம் முடியும் சமயத்தில் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நவம்பர் 28ஆம் தேதி விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாசிடமிருந்து அரசாங்கம் பெற்றுள்ளதாக இஸ்ரேலிய ராணுவ வானொலி கூறியது.
அந்தப் பட்டியலில் பத்துப் பேரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஆகியஸ் என்ற செய்தி இணையத் தளம் தெரிவித்தது.
ஆனால் இது குறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உடனடியாக தகவல் எதையும் வெளியிடவில்லை.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே ஏழு வார போருக்குப் பிறகு முதன் முதலாக சண்டை நிறுத்தம் நவம்பர் 24ஆம் தேதி அமலுக்கு வந்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் திடீரெனப் புகுந்து தாக்கி 250க்கும் மேற்பட்டவர்களை பிணைப் பிடித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் இஸ்ரேலியர்கள் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து காஸா வட்டாரத்தை இஸ்ரேல் சரமாரியாகத் தாக்கி குண்டுகளை வீசி பல கட்டடங்களைத் தரைமட்டமாக்கியது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் ஏறக்குறைய 15,000 பேர் உயிரிழந்ததாக காஸா வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பத்து பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க விரும்புவதாக முன்னதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
“காஸா வட்டாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மேலும் இரண்டு நாள் போரை நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது,” என்று கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சமூக ஊடகமான எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஹமாசும் இதனை உறுதி செய்திருந்தது.
வெள்ளை மாளிகையின் பேச்சாளரும் இரண்டு நாள் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.