பாரிஸ்: முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தை அனைத்துலக சாக்கடை கால்வாய் என்று கூறியுள்ளார் பாரிஸ் நகர மேயர் அண்ணி ஹிடால்கோ.
மேலும், அவர் இனி ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
‘எக்ஸ்’ தளத்தில் பொய்யான தகவல்களும் அச்சுறுத்தும் கருத்துகளும் நிரம்பி வழிகிறது இதனால் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என்றார் ஹிடால்கோ.
2022ஆம் ஆண்டு இறுதியில் டுவிட்டரை வாங்கினார் ஏலன் மஸ்க். அதன் பின்னர் அந்த சமூக ஊடகத்தில் வெறுப்புமிக்க பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன.
வெள்ளை மாளிகையும் அது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தது.
வெறுப்புமிக்க பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டதால் பெரும் நிறுவனங்கள் பல ‘எக்ஸ்’ தளத்தில் விளம்பரம் செய்வதை நிறுத்தவும் குறைக்கவும் செய்து வருகின்றனர்.