சிட்னி: நிகோட்டின் நிரப்பப்பட்ட சாதனங்களை இளையர்கள் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கும் முயற்சியாக பயன்படுத்திவிட்டு வீசக்கூடிய புகைக்கும் திரவங்களின் இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா 2024 ஜனவரி முதல் தடை விதிக்க உள்ளது.
இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தத் தடை 2024 மார்ச்சில் விரிவுபடுத்தப்படும். அப்போது, மறுநிரப்புக் கலன்கள் உள்ளிட்ட சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படாத எல்லாவிதமான புகை திரவங்களின் இறக்குமதிக்கான தடை விதிக்கப்படும்.
அதேநேரம் மருத்துவப் பயன்பாட்டுக்கான புகை திரவங்களை இறக்குமதி செய்வோர் அதற்கான அனுமதியை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து பெறவேண்டி இருக்கும் என்று சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதேபோன்ற தடை உள்ளூர் தயாரிப்பாளர்களிடமும் விதிக்கப்படும். 2024ஆம் ஆண்டில் அதற்கான அம்சம் சட்டத்தில் கூடுதலாகச் சேர்க்கப்படும் என்றார் அவர்.
பொருளியல் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் பெரும்பாலும் வசதிபடைத்தவை. திரவ புகைப்பழக்கம் இந்த அமைப்பில் உள்ள நாடுகளிடம் மிகக் குறைவாகக் காணப்பட்டபோதிலும் ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள இளையர்களிடம் இந்தப் போக்கு வளர்ந்து வருகிறது.
18க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதினரில் ஐந்தில் ஒருவரிடம் அந்தப் பழக்கம் இருப்பதாக அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.
மருத்துவ சிகிச்சைக்கான புகை திரவங்களில் வாசனைகள் பயன்படுத்துவதும் கட்டுப்படுத்தப்படும். குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே அவற்றில் நிகோட்டின் இருக்கும்.
மேலும், மருந்துக்கடைகளில் மட்டுமே அவற்றை விற்கும் வகையில் 2024ஆம் ஆண்டில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.