வெல்லிங்டன்: நியூசிலாந்து அரசாங்கம் ‘சிகரெட்டுகள்’ புகைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்துள்ளது. அதை அந்நாட்டு மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
புகைப்பதற்கான விதிமுறைகளை மாற்றி அமைப்பது பொது சுகாதாரத்திற்கு செய்யும் பெரிய கேடு என்றும் மருத்துவர்கள் சாடியுள்ளனர்.
நியூசிலாந்து பிரதமராக ஜசிண்டா ஆர்டன் பொறுப்பில் இருந்தபோது 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் ‘சிகரெட்டுகள்’ வாங்க அனுமதி இல்லை என்று சட்டம் வரையப்பட்டது. அதற்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்தது.
இந்த சட்டத்தால் 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்தில் ‘சிகரெட்டு’ புகைக்கும் பழக்கம் மறையக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது பிரதமராக இருக்கும் கிறிஸ்டோபர் லக்சன், ஜசிண்டா ஆர்டனின் ‘சிகரெட்டு’ புகைப்பதற்கு எதிரான சட்டத்தை நீக்கியுள்ளார்.
இந்த அறிவிப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்துள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது பின்னோக்கிய சிந்தனை. இது பொது சுகாதாரத்தை அழிக்கக்கூடும், என்று ஒட்டாகோ பல்கலைக்கழகத்தில் புகையிலை கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள ரிச்சர்ட் எட்வர்ட்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உலகமே பாராட்டிய ஒரு சட்டத்தை எப்படி இவ்வளவு எளிதாக நீக்கமுடிந்தது? இந்த சட்டத்தால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டது ஆனால் இப்போது இந்த மாற்றத்தால் பலரின் உயிர் ஆபத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிகரெட் விற்பனையின் மூலம் வரிக் குறைப்புகளை ஈடுகட்ட முடியும் என்று கிறிஸ்டோபர் லக்சனின் நியூசிலாந்து அரசாங்கம் கூறுகிறது.