கொழும்பு: இலங்கை அரசாங்கம் கடனில் இருந்து மீள்வதற்கான ஒப்பந்தத்தை கடன் கொடுக்கும் நாடுகளுடன் செய்துகொண்டு உள்ளதாக அரசாங்கத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுதொடர்பான உறுதிப் பத்திரம் அதிகாரத்துவ கடன்பற்றுக் குழுவிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை என்றும் அத்தகவல்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் புதன்கிழமை கூறின.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்பில் கடன் வழங்கிய நாடுகளுடன் அது பேசி வருகிறது.
இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளின் குழுவிற்கு இந்தியா மற்றும் பிரான்சுடன் ஜப்பானும் தலைமை ஏற்றுள்ளது.
இருப்பினும், அந்த நாட்டுக்கு அதிக அளவு கடன் வழங்கியுள்ள சீனா இந்தக் குழுவில் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.
தனது கடனில் $4.2 பில்லியனை அடைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (எக்ஸிம்) வங்கியிடம் இலங்கை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கடன் வழங்கிய பிற நாடுகளுடனும் பேசி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான நடவடிக்கையில் அது ஈடுபட்டு உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

