இஸ்கந்தர் புத்திரி: இஸ்லாமிய சமயத்திலிருந்து பிறழ்வோர், இஸ்லாமிய சமய நம்பிக்கையை ஏற்க மறுப்போர் ஆகியோரை திருத்த புதிய நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று மலேசியாவின் ஜோகூர் மாநிலம் அறிவித்துள்ளது.
இதற்காக மலேசியா ரிங்கிட் 400,000 (S$ 114,420) ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில இஸ்லாமிய சமய விவகாரக் குழுவின் தலைவர் முகமது ஃபாரித் காலிட் தெரிவித்தார்.
இந்த நிலையம் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் விளக்கினார்.
“இந்தப் புனரமைப்பு நிலையம் சமய நம்பிக்கையிலிருந்து விலகுவோரை மட்டுமல்லாது ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாக ஷரியா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களையும் திருத்த முற்படும்,” என்று அவர் கூறினார்.
இதுபோன்ற நிலையம் மலேசியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

