காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு சிங்கப்பூர் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
மருந்து, தூய்மைப்படுத்தும் பொருள்கள், தண்ணீர் வடிகட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களுடன் ஒரு விமானத்தை நவம்பர் 30ஆம் தேதி அது அனுப்பி வைத்தது.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் ‘ஏ330’ எனும் அந்த போக்குவரத்து விமானம் நள்ளிரவுக்குப் பிறகு சாங்கி விமானப் படைத் தளத்திலிருந்து எகிப்துக்குச் சென்றது.
உதவிப் பொருள்கள் அவசரமாகத் தேவைப்படுவதைக் கருத்தில்கொண்டு விமானத்தை அனுப்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சு, தற்காப்பு அமைச்சின் கூட்டு அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரின் இந்த மனிதாபிமான உதவித் திட்டத்தில் விமானி, விமான ஊழியர்கள், ராணுவப் பாதுகாப்பு அதிகாரிகள், பொறியாளர்கள் உட்பட சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த மொத்தம் 46 பேர் ஈடுபடுகின்றனர்.
வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் தற்காப்பு மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதும் நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட விமானத்தை அனுப்பி வைத்தனர்.
எகிப்துக்கான சிங்கப்பூர் தூதர் டோமினிக் கோவின் முன்னிலையில் எகிப்தில் உள்ள எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொருள்கள் ஒப்படைக்கப்படும்.
பின்னர் அவை காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது ஏற்பட்டுள்ள இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை சுட்டிக்காட்டிய டாக்டர் பாலகிருஷ்ணன், சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுவதை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
“அதே நேரத்தில் அங்குள்ள சூழ்நிலையையும் அறிந்துவைத்து உள்ளோம். உதவிப் பொருள்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விநியோகிப்பதும் மிக அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
திரு ஸாக்கி முகம்மது, சிங்கப்பூர் அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பையும் ஒத்துழைப்பையும் நமது உதவி முயற்சிகள் காட்டுவதாகச் சொன்னார்.
முன்னதாக எகிப்திய ரெட் கிரசென்ட் அமைப்பிடம் எத்தகைய பொருள்கள் தேவைப்படுகிறது என்பதை வெளியுறவு அமைச்சு கண்டறிந்தது.
அதன் பிறகு சிங்கப்பூர் ஆயுதப் படையின் சாங்கி வட்டார மனிதாபிமான, பேரிடர் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம்(ஆர்எச்சிசி) பொருள்களை சேகரித்து ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.
சாங்கி ஆர்எச்சிசி கடந்த 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டில் நேப்பாளுக்கும் 2018 லாவோசுக்கும் அது நிவாரணப் பொருள்களை அனுப்பியிருக்கிறது.
கடந்த அக்டோபரில் சிங்கப்பூர் அரசாங்கம், நிவாரணப் பொருள்களுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் 300,000 வெள்ளி பங்களிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதில் அரசாங்கம் மட்டுமே 300,000 யுஎஸ் டாலர் (S$400,000) மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளது.
சென்ற நவம்பர் மாதம் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள ராஃபா எல்லையில் உதவிப் பொருள்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.