வாஷிங்டன்: அமெரிக்க விண்கலமான அப்போலோ நிலவுக்குச் சென்று, திரும்பி ஏறக்குறைய 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இவ்வேளையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மீண்டும் நிலவில் கால்பதிக்கத் தயாராகி வருகிறது அமெரிக்கா.
இந்த முயற்சி வெற்றிபெற்றால், முதல்முறையாக தனியார்துறை நிறுவனம் ஒன்றின் விண்கலம் நிலவில் தரையிறங்கிய சிறப்பைப் பெறும்.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள விண்கலத்தின் பெயர் பெரிக்ரின். இதன் நிலவுப் பயணத்தில் மனிதர்கள் யாரும் உடன்செல்ல மாட்டார்கள் எனக் கூறியுள்ளது இதனை உருவாக்கிய அஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜி நிறுவனம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் கருவிகளை அது ஏந்திச் செல்லும். நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இந்த முயற்சி மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் கூறியது.
டிசம்பர் 24ஆம் தேதி, ஃபுளோரிடாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் உந்துகணை, சில நாள்களில் நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடையும். இருப்பினும் சரியான ஒளிச் சூழலை எதிர்நோக்கி, ஜனவரி 25ஆம் தேதி வரை அது காத்திருக்க வேண்டும்.

