வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்காப்பு அமைச்சின் ஆலோசகராகவும் செயல்பட்ட ஹென்ரி கிஸிஞ்சர் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 100.
இரண்டு அமெரிக்க அதிபர்களுக்கு வெளியுறவு அமைச்சராக இருந்த டாக்டர் கிஸிஞ்சர் அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
அவருக்கு 1973ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
டாக்டர் கிஸிஞ்சர் கனெக்டிகெட்டில் உள்ள தனது வீட்டில் காலமானதாக அவரது நிறுவனம் தகவல் வெளியிட்டது.
கடந்த ஜூலை மாதம் டாக்டர் கிஸிஞ்சர், பெய்ஜிங் சென்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்தார்.
1970களில் பனிப்போர் நடந்த காலத்தில் டாக்டர் கிஸிஞ்சர் அரசியல் ரீதியாக பல நடவடிக்கைகள் எடுத்து உலகின் கவனத்தை ஈர்த்தார்.
டாக்டர் கிஸிஞ்சர் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் பெரும்பங்காற்றியவர் டாக்டர் கிஸிஞ்சர் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள உறவை வலுப்படுத்த உழைத்தவர் கிஸிஞ்சர்என்றும் கிஷிடா கூறினார்.
அமெரிக்கா, சீனாவுடான நட்பை உருவாக்க கிஸிஞ்சர் துணையாக நின்றார் என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஸி பெங் கூறியுள்ளார். அவரது மறைவு இரு நாடுகளுக்கும் பேரிழப்பு என்றும் பெங் ‘எக்ஸ்’ சமூக ஊடகம்வழி கவலை தெரிவித்தார்
வரலாறு டாக்டர் கிஸிஞ்சரை மறக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

