துபாய்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் தற்போது நடைபெறும் போருக்கு பிந்திய மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகள் குறித்து எடுத்துரைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக, மத்திய கிழக்கின் மேற்குக் கரை, காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் அனைவரும் ஒரே ஆட்சி அதிகாரத்தின்கீழ் வரவேண்டும் என்பதை அவர் வலியறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேஸ், ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே நடைபெறும் போரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவனம் செலுத்தும் நிலையில், துபாயில் நடைபெறும் பருவநிலை தொடர்பான மாநாட்டில் தனது பிரதிநிதியாக செயல்படுமாறு துணை அதிபர் ஹாரிஸை திரு ஜோ பைடன் பணித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் போரில் அந்த வட்டாரம் மூழ்கியுள்ள நிலையில், திருவாட்டி ஹாரிஸ் போருக்குப் பிந்திய காஸா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை அங்கு விளக்குவார் என்று விளக்கமளிக்கப்படுகிறது.
“போருக்கு பிந்திய காஸா பாலஸ்தீன மக்களுக்கான ஒரு தெளிவான பாதையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் பாலஸ்தீன மக்கள் ஒரே நாட்டின்கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துவார்” என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சொன்னார்.
மேற்கத்திய நாடுகள் ஆதரிக்கும் பாலஸ்தீன இயக்கம் மேற்குக் கரைப் பகுதிகளை ஆட்சி செய்கிறது. ஹமாஸ் இயக்கம் 2007ஆம் ஆண்டு பாலஸ்தீன இயக்கத் தலைவர் மஹ்முத் அப்பாசின் ஃபாட்டா கட்சியிடமிருந்து காஸாவைக் கைப்பற்றிய பின்னர் அதைத் தனிப் பிரிவாக ஆட்சி செய்து வந்துள்ளது. T
அமெரிக்க அதிபர் பைடனுக்கு 81 வயது ஆகிறது. அவர் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் நிலையில், துணை அதிபர் ஹாரிசின் பங்குக்கு அவர் குடியேற்றம், கருக்கலைப்பு, வாக்களிக்கும் உரிமை போன்ற முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமாறு பணிக்கப்பட்டுள்ளது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.