மணிலா: பிலிப்பீன்சின் தெற்கு வட்டாரத்தை 7.4 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் தாக்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர்.
மின்டானாவ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்தது ஒருவர் மாண்டதாகவும் சில கட்டடங்களுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக சில குடியிருப்பாளர்களும் கூறியிருந்தனர்.
நிலநடுக்கத்திற்கு பின்னர் 500க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவானதாக பிலிப்பீன்ஸ் எரிமலை, நிலவியல் ஆய்வுக் கழகம் கூறியது.
“நிலநடுக்கத்துடன் தொடர்புடைய சுனாமி அச்சுறுத்தல் இப்போது இல்லை. இருந்தாலும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்,” என்று அது மேலும் தெரிவித்தது.
இதற்கிடையே நிலநடுக்கத்தின் பாதிப்பை மதிப்பிட்டு வருவதாக தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.
அதே சமயத்தில் பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படையின் கப்பல்களும் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.