இஸ்கந்தர் புத்ரி: ஜோகூரில் உள்ள சுங்க, குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் தனிமைப்படுத்தலுக்கான வளாகத்திலும் கடப்பிதழுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென, மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி பரிந்துரைத்துள்ளார்.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் 2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் அத்தகைய நடைமுறையை அமல்படுத்தவிருப்பதை அவர் சுட்டினார்.
ஜோகூரிலும் அதேபோல் செயல்படுத்தலாம் என்று கூறிய திரு ஓன் ஹஃபிஸ், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் அந்த நடைமுறை உதவும் என்றார்.
“சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அண்மையில் 10வது சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பில் எடுத்த முடிவை ஜோகூர் மாநில அரசாங்கம் வரவேற்கிறது.
“அதேவேளையில், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே ஊழியர்களும் பொருள்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களும் சுமுகமாகக் கடந்துசெல்வதை உறுதிப்படுத்தும் விதமாக, மலேசியாவின் மத்திய அரசாங்கத்திடமும் சிங்கப்பூர் அரசாங்கத்திடமும் மூன்று பரிந்துரைகளை முன்வைக்க ஜோகூர் மாநில அரசாங்கம் விரும்புகிறது.
முதலாவதாக, “ஒன்றுக்கு மேற்பட்ட முறை செல்வதற்கான விசா, சிறப்பு அனுமதி அட்டைகளை வழங்குதல், குடி நுழைவு, சுங்கத்துறைகளில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுவதை உறுதிசெய்தல், சுங்க, குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் தனிமைப்படுத்தலுக்கான வளாகத்திலும் கியூஆர் குறியீட்டை அறிமுகம் செய்வது ஆகியவை குறித்து மலேசியாவின் மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யவேண்டும் ,” என்று ஜோகூர் முதல்வர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (டிச. 3), மாநில சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அவரது இரண்டாவது பரிந்துரை, முக்கிய உள்கட்டமைப்பை நிறைவுசெய்தல். இரண்டாவது இணைப்புப் பாலத்தையும் ஃபாரஸ்ட் சிட்டியையும் இணைக்கும் சிறப்புத் தடம், இலகு ரயில் போக்குவரத்து, அதிவேக ரயில் திட்டம், படகுச் சேவைகள், ‘ஏர் டாக்சி’களுக்கான தளம் ஆகியவற்றை அமைத்தல் ஆகியவற்றை திரு ஓன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.
மூன்றாவதாக, ஊக்கத்தொகைகளை அறிவிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார். நிறுவன, தனிநபர் வரி, முதலீட்டு வரி போன்றவற்றில் சலுகைகள் வழங்கலாம் என்பது ஜோகூர் முதல்வரின் பரிந்துரை.