பெட்டாலிங் ஜெயா: பல மாணவர்கள் கலந்துகொண்டு, பள்ளியில் பணியாற்றிய பாதுகாவலருக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று அளித்த பிரியாவிடை நிகழ்ச்சியின் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகி வருகிறது.
ஈப்போவில் உள்ள எஸ்.கே.பண்டார் பாரு புத்ரா தொடக்கப்பள்ளி மாணவர்கள் காட்டிய அன்பில் பரவசப்பட்டு, பாதுகாவலர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்துவதைக் காணொளியில் பார்க்கமுடிந்தது. மாணவர்கள் பலர் அவரைக் கட்டித் தழுவினர், கைகுலுக்கினர். ஒருவர் அவரை அப்படியே தூக்கிக் கொண்டாடி மகிழ்ந்தார்.
அங்கிள் கிட்டு என்று பலராலும் அழைக்கப்பட்ட திரு கிட்டு 50 வயதானவர். அவரது வீடு, பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள தாமான் ஸ்ரீ கிலெபாங் என்ற பகுதிக்கு மாறிவிட்டது. அதனால் பாதுகாவலர் பணியை கைவிட நேர்ந்துள்ளது என்று அவர் சினார் ஹாரியான் மலாய் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பள்ளியில் அனைவரையும் குடும்பத்தினராகக் கருதும் திரு கிட்டு, இந்த அளவு அன்பை மாணவர்கள் வெளிப்படுத்தியதை எதிர்பார்க்கவில்லை. மாணவர்கள் வழங்கிய பரிசுப் பொருள்களினால் அவரது காரே நிரம்பிவிட்டது.
முன்னாள் லாரி ஓட்டுநரான திரு கிட்டு, காலை 6.30 மணிக்கெல்லாம் மாணவர்களைப் பள்ளியில் வரவேற்பதையும் சாலையைக் கடக்க உதவுவதையும் தம்மால் மறக்கமுடியாது என்று கூறினார்.
அன்பு, ஒற்றுமை, ஒருவருக்கொருவர் வைக்கும் மரியாதை ஆகியவற்றை பரைசாற்றிய இந்தப் பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பள்ளியை பலரும் சமூக ஊடகத்தில் பாராட்டினர்.