பாரிஸ்: பிரான்ஸ் நாட்டுக்கு தனி அடையாளத்தைத் தரும் நோட்டர் டேம் தேவாலயம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெருத்த சேதமடைந்தது.
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகள் முடிய இன்னும் ஓராண்டுதான் உள்ளது என்று கூறப்படுகிறது.
யுனெஸ்கோ எனப்படும் ஐநா அமைப்பின் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ள இந்த தேவாலயம் ஆண்டுக்கு 12 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்கிறது. அதன் கூர்மையான கோபுரம் 2019ஆ:ம ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சரிந்து விழுந்தபோது உலக நாடுகள் அச்சத்தில் உறைந்து நின்றன. அதன் மறுசீரமைப்புப் பணிகளில் பல தடங்கல்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், புதிய கோபுரம் பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் விண்வெளியில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது என்றும் அந்நாடு வரும் கோடை காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தும்போது முழுமை அடைந்துவிடும் என்றும் தற்பொழுது எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அங்கு பல நூறு ஊழியர்கள் சாரக்கட்டுகளின் துணையுடன் அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதிக்குள் இந்தக் கோபுரம் பொதுமக்கள் பார்வைக்கு வரும் வகையில் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
“இருக்கும் கால அவகாசத்துக்குள் வேலையை முடிக்கும் விதமாகத்தான் பணிகள் நடைபெறுகின்றன.
“காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆயினும், இது அன்றாடப் போராட்டமாக உள்ளது,” என்கிறார் இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள ஃபிலிப்பே ஜோஸ்ட் என்ற அரசு ஊழியர்.
புதிய கோபுர உச்சம் 19ஆம் நூற்றாண்டு கட்டட வடிவமைப்பாளர் இயூஜின் வியோலெ-லெ-டக் வரைந்த பழைய கோபுரத்தைப் போலவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.