ஜகார்த்தா: நாட்டின் சுற்றுப் பயணத் துறையையும் பொருளியலையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாட்டு மக்களுக்கு விசா இல்லாத அனுமதி வழங்குவது குறித்து இந்தோனீசியா பரிசீலித்து வருகிறது.
இத்திட்டத்தில் இடம்பெறும் நாடுகளின் பட்டியலை ஒரு மாதத்திற்குள் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்டியாகா உனோ வியாழக்கிழமை கூறினார்.
கடந்த 2019ல், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் இந்தோனீசியாவுக்கு 16 மில்லியன் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 9.49 மில்லியன் பயணிகள் வருகை புரிந்தனர். 2022ன் அதே கால கட்டத்தில் பதிவான சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையைவிட இது 124.3 விழுக்காடு அதிகமாகும்.
தென்கிழக்காசிய நாடுகளைப் பின்பற்றி விசா தளர்வை அறிமுகம் செய்யும் மற்றொரு நாடாகிறது இந்தோனீசியா.
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளும் இத்தகைய விசா தளர்வுகளை ஏற்கெனவே அறிவித்துள்ளன.