வாஷிங்டன்: அமெரிக்காவின் டெனசி மாநிலத்தைத் தாக்கிய மோசமான புயல்களுக்கும் டொர்னேடோ சூறாவளிக்கும் குறைந்தது அறுவர் பலியாகிவிட்டனர்.
அவற்றால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் மின்தடையால் பாதிக்கப்பட்டதாகவும் உள்ளூர் அவசரச் சேவை அமைப்புகள் தெரிவித்தன.
மொன்ட்கொமரி கெளன்டி பகுதியில் மூவர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், அங்கு காயமுற்ற 23 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாஷ்வில் குடியிருப்புப் பகுதியில் மேலும் மூவர் இறந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது. ஃபேஸ்புக், எக்ஸ் ஆகிய சமூக ஊடகத் தளங்களில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.
சனிக்கிழமை நிலவரப்படி டெனசியில் 80,000க்கும் அதிகமானோர் மின்தடையால் பாதிக்கப்பட்டனர் என்று மின்தடை விவரங்களை வெளியிடும் poweroutage.us இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டது.
கிளார்க்ஸ்வில் நகரில் பல வீடுகள் சேதமடைந்ததாக மொன்ட்கொமரி கெளன்டி காவல்துறை தெரிவித்தது. டிரெஸ்டன் வட்டாரத்தில் பல மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவையும் புயலால் சேதமடைந்ததாக அவசர சேவை அமைப்புகள் கூறின.
பல்வேறு பகுதிகளில் அவசர சேவைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் சாலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

