சிட்னி: வெளிநாட்டினரை வேலைக்கு எடுப்பதில் ஆஸ்திரேலியா கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது.
அடுத்த ஈராண்டுகளுக்கு, அனைத்துலக மாணவர் விசா மற்றும் குறைந்த திறன் ஊழியர்களுக்கான விசா வழங்கும் முறையைக் கடுமையாக்க உள்ளதாக ஆஸ்திரேலியா திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்தது.
2022ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரை வேலைக்காகக் குடியேறிகளின் எண்ணிக்கை சாதனை அளவாக 510,000க்கு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் கிளார் ஓ’நீல் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
வெளிநாட்டினர் தருவிப்புக்கான புதிய உத்தியை அரசாங்கம் முறைப்படி அறிவிக்கும் முன்னர் அவரது அறிக்கை வெளியானது.
புதிய கொள்கைகளின்கீழ், அனைத்துலக மாணவர்கள் உயர்தரத்திலான ஆங்கில மொழித் தேர்வுகளில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம். மேலும், நீண்டகாலம் தங்க வகைசெய்யும் மாணவர்களின் இரண்டாவது விசாவுக்கான விண்ணப்பம் கடுமையாகப் பரிசீலிக்கப்படும்.
2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுவரை வெளிநாட்டினர் தருவிப்பு படிப்படியாகக் குறைந்து கொவிட்-19க்கு முந்திய நிலைமைக்குத் திரும்பும் என அரசாங்கத் தரவுகள் கணிக்கின்றன.
தற்போது ஏறக்குறைய அரை மில்லியனாக இருக்கும் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை, புதிய உத்தியின் மூலம் ஈராண்டுகளில் பாதியாக, அதாவது கால் மில்லியனாகக் குறையும் என தரவுகள் முன்னுரைக்கின்றன.
“ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டினர் தருவிப்பு முறையில் சரியான சமநிலையை எட்ட நாங்கள் இரவு பகலாகப் பணியாற்றினோம்.
“இலக்குடனான அரசாங்க சீர்திருத்தங்கள் ஏற்கெனவே ஒட்டுமொத்த வெளிநாட்டினர் வருகையைக் குறைத்துவிட்டன. இனியும் அந்த எண்ணிக்கை குறைய சீர்திருத்தங்கள் கைகொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் அவர்.
கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அனைத்துலக மாணவர்களின் வருகையே என்றும் அவர் தெரிவித்தார்.