சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்றில் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனுக்கு முன்னால் மண்டியிட்டு விமானச் சிப்பந்தி கரண்டியால் அவனுக்கு உணவூட்டுவதைக் காட்டும் இன்ஸ்டகிராம் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
ஆனால், நல்லெண்ணத்தில் அந்தச் சிப்பந்தி மேற்கொண்ட இச்செயல், இணையவாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடமைக்கு அப்பாற்பட்டு அந்தச் சிப்பந்தியின் நற்செயலை சிலர் பாராட்டினாலும், சிறுவனுக்கு உணவூட்டுவது அவரது கடமையன்று என்று வேறு சிலர் கருத்துரைத்தனர்.
அச்சிப்பந்தி உணவூட்டியபோது காதில் ‘ஹெட்ஃபோன்’ கருவியை அணிந்திருந்த அச்சிறுவனின் கவனம் மின்னிலக்கச் சாதனத்தில் மூழ்கியிருந்தது.
டிசம்பர் 5ஆம் தேதி பகிரப்பட்ட அக்காணொளி, இதுவரை 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
விமானச் சிப்பந்தியின் செயல் தேவையில்லாதது என்று கருதிய ஒருவர், “அச்சிறுவன் சொந்தமாக உணவருந்த முடியாத குழந்தை அல்லன். பயணிகளின் பாதுகாப்புக்காக விமானச் சிப்பந்திகள் உள்ளனர், குழந்தையைப் பராமரிப்பதற்கு அன்று,” என்றார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தின் ‘பிசினஸ் கிளாஸ்’ பிரிவில் தன் தந்தையுடன் அச்சிறுவன் பயணம் செய்தான்.