ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை, அதன் சிங்கப்பூருக்கான நில குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் நடத்திவரும் மேம்பாட்டுப் பணிகளை, பள்ளி விடுமுறை முடியும் வரை ஒத்திவைக்க ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோகூரின், சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு நிலையக் கட்டடத்தில் 2 நாள்களுக்கு முன்புதான் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் சில குடிநுழைவு முகப்புகள் கட்டங்கட்டமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 15 முதல் 2024 ஜனவரி 15 வரை அதிகாரிகள் முகப்புகளுடன் மின்வாயில்களும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்படும் என்று பேஸ்புக் பதிவில் ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை அறிவித்திருந்தது.
வழக்கத்துக்கும் மாறான கூட்டம் இருக்கும் பள்ளி விடுமுறை காலத்தில் இந்த அறிவிப்பு வந்தது பலரை அதிருப்தியாக்கியது.
ஜோகூர் மாநில முதல்வரின் இந்த வேண்டுகோளை பலர் நன்றியுடன் பாராட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர்.
2023ஆம் ஆண்டில் 7.8 மில்லியன் சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய சுற்றுலாத்துறை, கலை, கலாசார அமைச்சு கூறியிருந்தது.
அந்த வகையில் 2023 ஜூலை வரை 4.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இதுவே சுற்றுப்பயணிகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதல் இடத்தைக் கொடுத்துள்ளது.