ஆசியான், ஜப்பான் தடையற்ற வர்த்தக உடன்பாடு; மேம்படுத்த தக்க தருணம்: பிரதமர்

ஆசியான், ஜப்பான் தடையற்ற வர்த்தக உடன்பாடு; மேம்படுத்த தக்க தருணம்: பிரதமர்

2 mins read
023c31e6-833e-4787-a2cc-6d80fcaecd85
ஜப்பானிய பிரதமர் அலுவலகத்தில் டிசம்பர் 16ஆம் தேதியன்று அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா குழுவினரும் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான சிங்கப்பூர் குழுவினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். - படம்: சாவ் பாவ்

ஆசியானும் ஜப்பானும் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு மடங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த இதுவே தக்க தருணம் என்றும் பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

மேலும், ஆசியான்-ஜப்பானுக்கு இடையேயான ஆகாய சேவை தொடர்பான உடன்பாடு ஏற்படுமானால் அது இருதரப்புக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆசியான்-ஜப்பான் உறவுகள் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் உச்சநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் லீ, 1973ஆம் ஆண்டில் ஆசியானுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் நாடு ஜப்பான் என நினைவுகூர்ந்தார். ஜப்பான் தனது செயற்கை ரப்பரை ஏற்றுமதி செய்வது தொடர்பான கருத்தரங்கில் ஆசியானுடனான அந்தத் தொடர்பு ஏற்பட்டதாக பிரதமர் லீ விளக்கினார்.

அதுமுதல், ஆசியானுடனான ஜப்பானின் உறவு முறை பொருளியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

“ஜப்பானின் வேகமான பொருளியல் வளர்ச்சி இந்த வட்டாரத்தில் உள்ள பல நாடுகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் உந்துதல் தருவதாகவும் அமைந்தது,” என்று திரு லீ ஜப்பானின் பொருளியல் எழுச்சி எவ்வாறு மற்ற நாடுகளுக்கும் பரவியது என்று வர்ணித்தார்.

தொடர்ந்து பேசிய திரு லீ, தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானிய முதலீடுகளும் தொழில் திறன்களைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கும் ஆசியான் துரித வளர்ச்சி பெற உதவியதாக சொன்னார்.

மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் மற்ற அம்சங்களுடன் பொருளியல், இரு தரப்பு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.

ஐம்பதாண்டு நிறைவை நினைவுகூறும் வகையில், ஜப்பானும் ஆசியானும் வருங்கால பொருளியல் ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய அடிகள் எடுத்து வைத்துள்ளதை திரு லீ சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்