டென்னசி: டிசம்பர் 9ஆம் தேதியில் சூறாவளிக் காற்று அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் கிளார்க்ஸ்வில் நகரைத் தாக்கியது.
அதில் சிக்கிச் சீரழிந்தது திருவாட்டி சிட்னி மோர் என்பவரின் தற்காலிக வீடு. சூறாவளியில் 10 நிமிடங்களுக்கு சிக்கித் தவித்த திருவாட்டி மோர், அவர் காதலர் அராமிஸ் யங்பிளட் குடும்பம் செய்வதறியாது தவித்தது.
சூறராவளி தாக்கிவிட்டுச் சென்றபின் அவர்களது இரண்டாவது செல்வன், நான்கு மாத கைக்குழந்தை லார்ட்டை காணவில்லை.
லார்ட் தொட்டிலில் படுத்துறங்கியபோது சூறாவளி தாக்கியது. பதறிய அராமிஸ் யங்பிளட், 39, லார்ட்டை பாதுகாக்க ஓடினார். ஆனால், சூறாவளிக் காற்று வீட்டுக் கூரையை பிய்த்து எறிந்தபின் அவரும் குழந்தை லார்ட்டும் வீட்டுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டனர் என்கிறது சிஎன்என் செய்தித் தகவல்.
“சூறாவளி வீசிய நேரத்தில் யங்பிளட் குழந்தை லார்ட்டின் தொட்டிலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார். அவரும் குழந்தையும் சூறாவளியில் சுழன்று சுழன்று சென்றனர்,” என்று திருவாட்டி மோர், 22, நடந்ததை நினைவுகூர்ந்தார்.
முடிவில் தோள்பட்டை எலும்பு பிசகிய நிலையில் திரு யங்பிளட் குப்பைக் கூளத்துக்கு நடுவே, அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக வீடு இருந்த இடத்திலிருந்து 9 மீட்டர் தூரம் தள்ளி, சாய்ந்த மரத்தின் மீது குழந்தை லார்ட் அழுத நிலையில் படுத்திருப்பதை கண்டதாக கூறப்படுகிறது.