கோலாலம்பூர்: பூச்சோங்கின் தாமான் வாவாசான் வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஈரடுக்குத் தரைவீடுகளுக்கு அருகே கனமழையைத் தொடர்ந்து, சாலையில் திடீரென்று பெரிய குழி உருவானது.
அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.
கனமழையைத் தொடர்ந்து டிசம்பர் 16ஆம் தேதி பின்னேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தங்களது நான்கு கார்களை ‘விழுங்கியது’ குடியிருப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மண் அரிப்புக்கான அறிகுறிகளையோ சாலையில் விரிசல்களையோ தாங்கள் காணவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறினர். ஜாலான் வாவாசான் 3/9ல் உள்ள வீடுகள், மேடான பகுதியில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வட்டாரம் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, குழிக்கு மிக அருகிலிருக்கும் ஒன்பது வீடுகளிலிருந்து குடியிருப்பாளர்களை அவ்வீடுகளின் பின்கதவு வழியாக அதிகாரிகள் வெளியேற்றினர்.
தனது கண்முன்னே சாலை உள்வாங்குவதையும் அங்கே நிறுத்தப்பட்டிருந்த தனது கார் உள்ளிழுக்கப்படுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக அந்த ஒன்பது வீடுகளில் ஒரு வீட்டின் குடியிருப்பாளர் கூறினார்.
இத்தகைய நிலச்சரிவு ஏற்படுமென்று சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை என்கின்றனர் குடியிருப்பாளர்கள். அதிகாரிகள் உடனடியாக உதவிக்கரம் நீட்டியது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோதுதான், பல்கலைக்கழக மாணவரான மற்றொரு குடியிருப்பாளர் தன் தந்தையுடன் காரில் வீடு திரும்பினார். இதர குடியிருப்பாளர்கள் எச்சரிக்கவே காரைப் பின்னோக்கிச் செலுத்தித் தப்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.


