மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் 14 பேரையும் தமது தந்தையையும் மாணவர் ஒருவர் சுட்டுக்கொன்றுவிட்டார். தலைநகர் பிராக்கில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 21) அச்சம்பவம் நிகழ்ந்தது.
15 பேரையும் கொன்ற பின்னர், 24 வயதான அந்த மாணவர் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு மாண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
செக் குடியரசில் இதுவரை நிகழ்ந்திராத ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டு மரணச் சம்பவமாக அது கருதப்படுகிறது.
உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சனிக்கிழமை (டிசம்பர் 23) தேசிய துக்கதினம் கடைப்பிடிக்கப்படும் என செக் குடியரசு அறிவித்து உள்ளது. அதிபர் பீட்டர் பாவெல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் அவசரக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நடைபெற்ற சம்பவம் குறித்து தாம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக அதிபர் பாவெல் தெரிவித்தார். ஏராளமான இளையர்களின் உயிர் அனாவசியமாகப் பறிபோய்விட்டதாக அவர் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
“உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். நாட்டின் வரலாற்றில் ஆக மோசமான சம்பவம் இது,” என்றார் திரு பாவெல்.
இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து காவல்துறை தலைவர் மார்ட்டின் வொன்ரசேக் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
“துப்பாக்கிக்காரர் இவ்வாண்டு ரஷ்யாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவரால் தூண்டப்பட்டதாக சமூக ஊடகக் கணக்கு ஒன்றிலிருந்து உறுதிசெய்யப்படாத தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது.
“பல்வேறு துப்பாக்கிகளுக்கான அதிகாரத்துவ உரிமம் அந்த மாணவரிடம் இருந்தது. கிளட்னோ மாநிலத்தில் தொடங்கிய திட்டமிட்ட கொடூரச் செயல், துரதிருஷ்டவசமாக பல்கலைக்கழகத்தில் முடிந்திருக்கிறது,” என்றார் அவர்.
பிராக் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் ஆடவர் ஒருவரும் அவரது இரண்டு மாத பெண் குழந்தையும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும் மாணவருக்குத் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
“துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தமது உயிரை ஆடவர் மாய்த்துக்கொண்டதாகச் சொல்லப்பட்டாலும், பதிலடி கொடுக்கும் நோக்கில் காவல்துறை அவரை சுட்டுக்கொன்றதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
ஆடவரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை காவல்துறை கேட்டுக்கொண்டது. எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்ற காரணம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அனைத்துலகப் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று உள்துறை அமைச்சர் விட் ரேகுசான் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த பல்கலைக்கழகக் கட்டடத்தில் இருந்து மாணவர்கள் தங்களது கைகளை மேல்நோக்கி உயர்த்தியவாறே வெளியேறியதையும் வேறு சிலர் தாக்குதலில் இருந்து தப்பிக்க கட்டடக் கூரையின் விளிம்பு அருகே ஒளிய முயன்றதையும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் காட்டின.
அதேபோல, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வகுப்பறையில் இருந்த மேசை, நாற்காலிகளை இழுத்து அந்த இடத்தை மறைக்க முயன்றதையும் அந்தப் படங்களில் காண முடிந்தது.