கிள்ளான்: கிறிஸ்துமஸ் முதல் நோன்புப் பெருநாள் வரையிலான பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சிக்கும் முட்டைகளுக்கும் பஞ்சமிருக்காது.
மலேசிய வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹமட் சாபு இந்த உறுதிமொழியை வழங்கியிருப்பதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
கோழித் தீவனங்களைத் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களுக்கு மலேசிய போட்டித் திறன் ஆணையம் அபராதம் விதித்துள்ள நிலையில் அமைச்சரின் உத்தரவாதம் வெளியாகியிருக்கிறது.
தினசரி உணவுக்கு மட்டுமின்றி டிசம்பர் 25 கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் வரை வாடிக்கையாளர்களின் தேவைக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சுடன் தமது அமைச்சு நெருக்கமாகப் பணியாற்றும் என்று முஹமட் சாபு கூறினார்.
“கோழி, முட்டை போன்ற உணவுப் பொருள்கள் சந்தையில் எப்போதும் கிடைக்கும்,” என்று அவர் உறுதியளித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு அமைச்சுகளும் (வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு) நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து பண்டிகைக் காலங்களில்கூட உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்று 2023 தேசிய அமானா மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.
ஐந்து கோழித் தீவன உற்பத்தியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுக்கு உட்பட்டது என்றார் அவர்.
விலையில் முறைகேடுகள் நடந்தால் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும் வாடிக்கையாளர் மீது சுமையை ஏற்றாமல் இருக்கவும் தமது அமைச்சு உதவும் என்று அவர் சொன்னார்.
விலையை நிர்ணயிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதற்காக ஐந்து கோழித் தீவன உற்பத்தியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மொத்தம் 415.4 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
டின்டிங்ஸ் போல்ட்ரி, எஃப்எஃப்எம், கோல்ட் காய்ன் ஃபீட்மில்ஸ், லியோங் ஹப் ஃபீட்மீல். பிகே அக்ரோ-இண்டஸ்டிரியல் புரோடக்ட்ஸ் ஆகியன அவை.
ஏறக்குறைய 29 நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் மலேசியாவின் கோழித் தீவன சந்தையை 40 விழுக்காடு வரை கட்டுப்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.