வாஷிங்டன்: மில்லியன்கணக்கான டாலர் போனஸ் தராமல் டுவிட்டர் நிறுவனம் ஒப்பந்தங்களை மீறியதாக அமெரிக்க நீதிபதி டிசம்பர் 22ஆம் தேதியன்று தீர்ப்பளித்தார்.
தனது ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை அது நிறைவேற்றவில்லை என்று நீதிபதி கூறினார்.
டுவிட்டர் பெயர் மாற்றம் கண்டு தற்போது ‘எக்ஸ் கார்ப்’ என அழைக்கப்படுகிறது.
திரு எலோன் மஸ்க் இதன் உரிமையாளர்.
டுவிட்டரின் இழப்பீட்டுப் பிரிவின் மூத்த இயக்குநராக இருந்த திரு மார்க் ஸ்கோபிங்கர், திரு எலோன் மஸ்க்கின் நிறுவனத்திலிருந்து கடந்த மே மாதம் விலகினார்.
அதன் பிறகு, ஜூன் மாதத்தில் அவர் டுவிட்டருக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
டுவிட்டர் ஒப்பந்தத்தை மீறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
2022ஆம் ஆண்டில் டுவிட்டரை திரு எலோன் மஸ்க் கொள்முதல் செய்வதற்கு முன்பாகவும் அதற்குப் பிறகும் அந்த ஆண்டுக்கான போனஸ் இலக்கில் 50 விழுக்காட்டை ஊழியர்களுக்குத் தரப்போவதாக உறுதி அளிக்கப்பட்டதை திரு ஸ்கோபிங்கர் சுட்டினார்.
ஆனால் சொன்ன சொல்லை திரு எலோன் மஸ்க்கின் நிறுவனம் காப்பாற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, திரு ஸ்கோபிங்கர் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டுவிட்டர் தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.
இதற்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி வின்ஸ் சாப்ரியா மறுப்பு தெரிவித்தார்.