கொழும்பு: இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே, கிறிஸ்துமசை முன்னிட்டு 1,004 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சிறைத்துறை அதிகாரி ஒருவர் டிசம்பர் 25ஆம் தேதி இதனைத் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்டோரில் அபராதத் தொகையைக் கட்ட இயலாமல் சிறை சென்ற இலங்கைக் குடிமக்களும் அடங்குவர் என்று சிறைத்துறை ஆணையர் காமினி திசநாயக்க கூறினார்.
இலங்கையில் பெரும்பாலானோர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். கடந்த மே மாதம் விசாக தினத்தை முன்னிட்டு, இதேபோல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள் நடத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஏறக்குறைய 15,000 பேரை இலங்கைக் காவல்துறை கைது செய்தது. சந்தேக நபர்கள் 13,666 பேர் கைது செய்யப்பட்டதாகவும் சுமார் 1,100 போதைப் புழங்கிகள் தடுத்து வைக்கப்பட்டதுடன் கட்டாய மறுவாழ்வுப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இலங்கையின் சிறைச்சாலைகள், தொடர்ந்து நிரம்பி வழிகின்றன. 11,000 கைதிகளுக்கு மட்டுமே போதுமான சிறைக்கூடங்களில் கிட்டத்தட்ட 30,000 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறின.