சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் டிசம்பர் 25ஆம் தேதி இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் 110,000 வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலும் கோல்ட் கோஸ்ட் வட்டாரத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்ததாக எரிசக்தி நிறுவனமான எனர்ஜெக்ஸ் கூறியது.
“சேத நிலவரத்தை ஆய்வு செய்துவருகிறோம். ஒவ்வொரு நிமிடமும் சேதம் குறித்த தகவல்கள் வந்தவண்ணமாக உள்ளன. பயனாளர்கள் சிலர், சில நாள்களுக்கு மின்தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று அது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
கோல்ட் கோஸ்ட் வட்டாத்தில் ஒரு மரம் வேரோடு சாய்ந்ததில் 59 வயது மாது உயிரிழந்ததாக குவீன்ஸ்லாந்து மாநில அவசர மருத்துவ வாகனச் சேவை நிலையம் கூறியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அப்பெண் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் காரின் மீது மரம் சாய்ந்ததால் மாது ஒருவர், ஒரு மணி நேரத்திற்குமேல் காருக்குள் சிக்கியிருந்தார்.
பலத்த காற்று வீசியதால் சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடந்ததாகவும் வீடுகளின் கூரை சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி இடியுடன்கூடிய மழை, பலத்த காற்று, ஆலங்கட்டி மழை போன்றவை ஏற்படலாம் என்று வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது. கோல்ட் கோஸ்ட் பகுதியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் பாயும் ஆற்றில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.