கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் கிழக்குக் கரையோரத்தில் உள்ள கம்போங் பெர்படுவான் பகுதியில் முதிய தம்பதியைக் காட்டு யானைகள் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24ஆம் தேதி இரவு 10 மணியளவில் யானைகள் தாக்கியதில் 90 வயது லோபிஸ் ஜுபின் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் 61 வயது மனைவி தலாமா ஹமித் படுகாயமடைந்தார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருவாட்டி தலாமாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயிரிடப்பட்டுள்ள விளைநிலத்தைக் காவல் காப்பதற்காக அந்த முதிய தம்பதி தங்கியிருந்த குடிசையை, உணவு தேடி அலைந்த காட்டு யானை மந்தை தாக்கியது.
முதியவர்கள் இருவரும் தப்பியோட முனைந்தனர். ஆனால் யானைகள் அவர்களைத் துரத்தித் தாக்கின.
யானைகள் தாக்கியதில் திரு லோபிசுக்கு மார்பில் கடுமையான காயம் ஏற்பட்டது. அவர் மனைவிக்கு இடுப்பு எலும்பு முறிந்ததுடன் தொடைப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது.
மலேசியக் காவல்துறை இச்சம்பவத்தை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) உறுதிப்படுத்தியது.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வனத்துறையினர், 12 காட்டு யானைகளின் காலடித் தடங்களைக் காணமுடிவதாகக் கூறினர். அந்த யானை மந்தையை அடையாளம்காணும் முயற்சி தொடர்வதாக ‘த ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.