சட்டவிரோத வாடகைத்தாய் சேவை: விசாரணைக்கு சீனா உத்தரவு

2 mins read
54dc31a8-314e-4d90-8ed1-9a5381b07590
சீனாவின் ஹங்சோ, ஸியாமென் நகர்களில் வாடகை தாய் சேவை அதிரித்துள்ளது. - படம்: இணையம்

பெய்ஜிங்: சீனாவின் தெற்கு கடற்கரை நகரான ஸியாமென்னில் உள்ள மருந்தகம் ஒன்று ரகசியமாக வாடகைத்தாய் சேவை வழங்குவதாக செய்தித் தகவல் ஒன்று வெளியானது.

இதன்மூலம் இந்த மருந்தகம் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 300 குழந்தைகள் பிறப்பதற்கு உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்நகர சுகாதார அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஷங்காயை தளமாகக் கொண்டு செயல்படும் செய்தித்தாளில் பணிபுரியும் செய்தியாளர்கள் ஹங்சோ, ஸியாமென் நகர்களில் உள்ள மருந்தகங்களுக்குச் சென்று தகவல் சேகரித்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

அங்கு ஹாங்காங்கைச் சேர்ந்த லோங்டுஹுவா மருந்தகக் குழுமம் இந்த சட்டவிரோத வாடகைத்தாய் வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை வெளியிட்ட செய்தித்தாள், சீன தேசிய சுகாதார ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்தின் உள்ளூர் கிளை அதிகாரிகளை தொடர்புகொண்ட பின் இந்தத் தகவல் குறித்த செய்தி, காணொளியை டிசம்பர் 25ஆம் தேதி வெளியிட்டதாக அறியப்படுகிறது.

இது குறித்து கேள்விப்பட்ட ஹங்சோ, ஸியாமென் சுகாதார அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்போவதாக உறுதியளித்துள்ளனர்.

சீனாவில் வாடகைத்தாய் சேவை சட்டவிரோதமானது. இதன் தொடர்பில் சீன அரசாங்கம் அடிக்கடி நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும் சீனாவில் சட்டவிரோத வாடகைத்தாய் சேவை பரவலாக இருந்து வருகிறது.

அதற்குக் காரணம், சீனாவில் முன்பிருந்த ஆனால் தற்பொழுது கைவிடப்பட்ட ஒற்றைப் பிள்ளைக் கொள்கையில் சிக்காமல் தப்பிக்க இந்த வழியை நாடுவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் சொந்தமாக பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலோ அல்லது கருவை சுமக்க முடியாமல் இருப்பதாலோ இந்தச் சேவையை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த விவகாரத்தில் சீன மனப்போக்கு மாறிவருவதாக கூறப்படுகிறது. சீனாவில் குறைந்துவரும் பிள்ளை பிறப்பு விகிதத்தால் வாடகைத்தாய் சேவை அவசியம் என சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

சட்டவிரோத வாடகைத்தாய் சேவை வழங்கும் மருந்தகங்கள் சீன அரசு இதற்கான சட்ட விளைவுகளை திட்டவட்டமாக அறிவிக்காததால் சட்டத்தை மீறுவதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோத வாடகைத்தாய் சேவையை வழங்குவது தெரியவந்தால் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என செய்தியாளர்கள் வினவினர். இதற்கு பதிலளித்தவர்கள் மருத்துவர்கள் தங்கள் தொழில் நடத்தும் உரிமத்தை இழப்பர். அத்துடன், மருந்தகத்திற்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று விளக்கினர்.

குறிப்புச் சொற்கள்