தோக்கியோ: தோக்கியோ விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஜனவரி 2ஆம் தேதியன்று தரையிறங்கியபோது மற்றொரு விமானத்துடன் மோதி தீக்கு இரையானது. அதில் இருந்த பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஜப்பானியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின்மீது அந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்துக்குக் கவனக்குறைவு காரணமா என்று கண்டுபிடிக்க ஜப்பானியக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான கடலோரக் காவல்படை விமானத்தில் இருந்த ஆறு அதிகாரிகளில் ஐவர் மாண்டனர்.
அண்மையில் ஜப்பானின் மேற்குப் பகுதியில் பல நிலநடுக்கங்கள் உலுக்கின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணிகளில் அந்த அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஓடுபாதைகளில் இதுபோன்ற விபத்துகள் முன்பு பலமுறை நிகழ்ந்திருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது நடப்பில் உள்ள தொழில்நுட்பத்தால் அத்தகைய விபத்துகள் வெகுவாகக் குறைந்திருப்பதாக அவர்கள் கூறினர்.
“இந்த விபத்து, கவனக்குறைவு காரணமாக நிகழ்ந்ததற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது,” என்று முன்னாள் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானியும் விமானப்போக்குவரத்து பகுப்பாய்வாளருமான ஹிரோயுக்கி கொபாயாஷி தெரிவித்தார்.