தோக்கியோ: தோக்கியோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று ஆடவர்கள் காயமடைந்தனர். கையில் கத்தியுடன் இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை இரவு 11 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் இரவு 10 மணி) அகிஹபாரா நிலையத்தில் அவசர அழைப்பு வந்ததாக தோக்கியோ பெருநகரக் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
நகரின் சுறுசுறுப்பான யாமானோட் ரயில் தடத்தில் சம்பவம் நிகழ்ந்ததாகவும் ஆடவர்களைக் காயப்படுத்திய பெண் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
காயமடைந்த ஆடவர்களின் விவரம் தெரியவில்லை என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார். இருப்பினும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என கியோடோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
கத்திக்குத்து சம்பவம் காரணமாக யாமானோட் ரயில் தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.