தோக்கியோ: புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 73க்கு வியாழக்கிழமை உயர்ந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அனைத்து இறப்புகளும் நோட்டோ தீபகற்பத்தின் இஷிகாவா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் 33,000 க்கும் மேற்பட்டவர்கள் என்றும் சுமார் 100,000 வீடுகளுக்கு நீர் விநியோகம் இல்லை என்றும் உள்ளூர் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறைபனிக்கும் பலத்த மழைக்கும் மத்தியில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள பலரை விடுவிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான மீட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், துண்டிக்கப்பட்ட சாலைகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொலைதூரத்தில் இருப்பதாலும் அவர்களின் மீட்புப் பணி தடைப்பட்டு கடுமையாகியது.
நிலநடுக்கத்திற்கு மூன்று நாள்களுக்குப் பிறகும் முழு அளவிலான சேதம் மற்றும் உயிரிழப்புகள் தெரியவில்லை.