டாக்கா: பங்ளாதேஷில் ரயில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரு நாள்கள் இருக்கும் வேளையில் அந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
மரணமடைந்தோர் தவிர எட்டுப் பேர் காயமடைந்தனர்.
தலைநகர் டாக்காவைச் சேர்ந்த அந்த ‘பினாபோல்’ விரைவு ரயிலில் பற்றிய தீ நான்கு ரயில் பெட்டிகளுக்குப் பரவியது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) இரவு 9 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் இரவு 11 மணி) அச்சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 7) நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை எதிர்த்தரப்பு பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தத் தீச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி நான்காவது முறை பதவியில் அமர கள்ள வாக்குகளைப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாக அக்கட்சி குறைகூறியது.
முக்கிய எதிர்க்கட்சியான பிஎன்பி, இதுவரை மூன்று தேர்தல்களில் இரண்டைப் புறக்கணித்து உள்ளது.
பிரதமர் பதவியை நடுநிலை அரசாங்க அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு திருவாட்டி ஹசினா நேர்மையாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்தது. அதனை திருவாட்டி ஹசினா ஏற்கவில்லை.
அதேநேரம், நாட்டில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு ‘பிஎன்பி’தான் காரணம் என்று அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
குறிப்பாக, டாக்காவில் 2023 அக்டோபரில் நிகழ்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அக்கட்சி தூண்டிவிட்டதாக திருவாட்டி ஹசினா தெரிவித்தார். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து 10 பேர் உயிரிழந்தனர்.
சென்ற மாதம் எதிர்க்கட்சி நடத்திய நாடளாவிய வேலைநிறுத்தத்தின்போதும் ரயில் ஒன்றுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீச்சம்பவத்திற்கு ஆளும் கட்சியே காரணம் என்று பிஎன்பியின் மூத்த தலைவர் ருஹுல் கபிர் ரிஸ்வி கூறியுள்ளார்.
“எங்கள் மீது பழிபோட நடைபெற்ற சதிச்செயலே இந்தத் தீச்சம்பவம் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், மனிதாபிமானத்துக்கு எதிரான கொடூரச் சம்பவம் இது,” என்றார் அவர்.
இது பற்றிக் கருத்துத் தெரிவிக்க ஆளும் அவாமி லீக் கட்சித் தலைவர்களின் தொடர்பு உடனடியாகக் கிடைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.