ஜப்பான்: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாள்களுக்குப் பிறகு, இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார்.
சுசு பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த ஒரு வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர், ஜனவரி 6ஆம் தேதி மீட்கப்பட்டார்.
வழக்கமாக, பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கத்திற்கு மூன்று நாள்களுக்குப் பிறகு யாரையும் உயிருடன் மீட்பதற்கான நம்பிக்கை மறையத் தொடங்கும். ஆனால் ஐந்து நாள்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்த இந்த மூதாட்டியை, கடுமையான மழைக்கு இடையில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த முதிய பெண்மணி, மருத்துவர்களின் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிப்பதாக என்எச்கே ஒலிபரப்புக் கழகம் தெரிவித்தது.
இருப்பினும், பனி, புயல் ஆகியவற்றால் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) மீட்புப் பணிகள் சிக்கலை எதிர்கொள்ளக்கூடும் என்று கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மழை, குளிர், பனிப்பொழிவு ஆகியவை ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.