குயிட்டோ: எக்குவடோரில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒருவரான லாஸ் சோனெரோஸ் குற்றவியல் குழுவின் தலைவர், சிறையிலிருந்து காணாமல் போய்விட்டார் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குவாயாகில் சிறையிலிருந்த கைதிகளில் ஒருவர் காணாமல் போனதைப் பற்றி நாட்டின் ஆயுதப் படை உறுதிப்படுத்தியது என்று தேசிய காவல்துறை தலைவர் ஜெனரல் சீசர் ஸபாட்டா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஸபாட்டா, கைதியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், தப்பித்ததாகக் கூறப்படும் லாஸ் சோனெரோஸின் தலைவரான ஜோஸ் அடோல்ஃபோ மசியாஸ் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று வழக்கறிஞர் அலுவலகம் கூறியது.
போதைப்பொருள் கடத்தலுக்கும் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கும் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
“அவரைத் தேடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சட்ட அமலாக்க துறைகளின் துணிவுக்கும் கடப்பாட்டுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம். அந்த நடவடிக்கையில் 3,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ராபர்டோ இசுரியேட்டா கூறினார்.