புருணை: புருணை இளவரசர் அப்துல் மட்டீன், 32, வியாழக்கிழமை (ஜனவரி 11), சாதாரண குடும்பத்துப் பெண்ணான 29 வயது யாங் மூலியா அனிஷா ரோஸ்னாவைக் கரம்பிடிக்கிறார்.
இவர்களின் மணவிழா மிக ஆடம்பரமான முறையில் பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படவிருக்கிறது.
புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவானில் உள்ள தங்கக் கூரை வேய்ந்த பள்ளி வாசலில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெறும்.
இளவரசர் அப்துல் மட்டீன், புருணை மன்னர் ஹசானல் போல்கியாவின் பத்தாவது குழந்தையாவார். போலோ விளையாட்டில் இவருக்கு ஈடுபாடு உண்டு.
மணப்பெண் யாங் மூலியா அனிஷா ரோஸ்னா, மன்னரின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரின் பேத்தி. அலங்காரப் பொருள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரான இவர், சுற்றுப்பயண வர்த்தகம் ஒன்றின் இணை உரிமையாளர் என்றும் கூறப்படுகிறது.
அரச குடும்ப மணவிழாவின் உச்சகட்டமாக ஜனவரி 14ஆம் தேதி, 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் பெரிய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. பின்னர் அணிவகுப்பும் இடம்பெறும்.
அனைத்துலக அளவில் அரசகுடும்பத்தினரும் அரசியல் தலைவர்களும் இதில் கலந்துகொள்வர்.
ஜனவரி 14ஆம் தேதி அரசகுடும்ப வாகனத்தில் புதுமணத் தம்பதி வீதி வலம் வருவதைக் காண, புருணை மக்கள் திரளாகக் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.