லண்டன்: ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் மூளை வீக்கத்தைத் தரக்கூடிய நிபா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை மனிதர்களுக்கிடையே சோதனை செய்யத் தொடங்கிவிட்டதாக வியாழக்கிழமை (ஜனவரி 11) அறிவித்தது.
பழங்களை உண்ணும் வெளவால்களால் பரவுவதாக நம்பப்படும் இந்த நிபா கிருமித் தொற்று முதன் முதலில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் கண்டறியப்பட்டது.
பிறகு, கேரளா மாநிலத்திலும் பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் போன்ற ஆசியாவின் பிற பகுதிகளிலும் பரவியதாகத் தகவர்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொடிய கிருமித்தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி இல்லை.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவால் நடத்தப்படும் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை, 51 நோயாளிகளை உட்படுத்தும். அது, ஆக்ஸ்போர்டிலேயே நடைபெறும்.
18 முதல் 55 வயதுக்கு உட்பட்டோருக்கிடையே தடுப்பூசியின் பாதுகாப்பும் எதிர்ப்பு சக்தியும் சோதிக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் அறிவியல் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நிபாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ட்ராஜெனெகாவும் சீரம் ஆய்வு நிறுவனமும் இதற்கு முன்னர் கொவிட்-19 தடுப்பூசிகளுக்குப் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை இந்த நிபா தடுப்பூசிக்கும் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.