கோபன்ஹேகன்: டென்மார்க்கின் மன்னராக ஐந்தாம் ஃபிரெடிரிக் அரியணை ஏறியுள்ளார்.
முடிசூட்டு விழாவைக் காண கிறிஸ்டியன்போர்க் அரண்மனைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
கடந்த 52 ஆண்டுகளாக மன்னர் ஃபிரெடிரிக்கின் தாயாரான ராணி மார்கிரேத், டென்மார்க்கின் அரசியாக இருந்து வந்தார். தமது மகனின் முடிசூட்டு விழாவுக்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தபோது அவர் அரியணை துறந்தார்.
டென்மார்க் அரச குலத்தைப் பொறுத்தவரை கடந்த 800 ஆண்டுகளில் ராணி ஒருவர் தாமாகவே முன்வந்து அரியணை துறப்பது இதுவே முதல்முறை.
முடிசூட்டு விழாவுக்குப் பிறகு மன்னர் ஃபிரெடிரிக் டென்மார்க் மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அனைவரையும் ஒன்றிணைக்கும் மன்னராகத் திகழ்வதே தமது இலக்கு என்று அவர் கூறினார்.
அத்துடன், தமது தாயார் மிகச் சிறந்த ராணியாக இருந்ததாக அவர் புகழாரம் சூட்டினார்.
55 வயது மன்னர் ஃபிரெடிரிக்குடன் அவரது மனைவி மேரியும் அவர்களது நான்கு பிள்ளைகளும் இருந்தனர்.
அவர்களில் 18 வயது பட்டத்து இளவரசர் கிறிஸ்டியனும் அடங்குவார்.
மன்னர் ஃபிரெடிரிக்கின் மனைவியான ராணி மேரி ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்.