ஹேம்பர்க்: இந்தோனீசியாவின் அரசாங்க கொள்முதல் அமைப்பான புலோக், 500,000 டன் அரிசி வாங்க அனைத்துலக ஒப்பந்த விலைப்புள்ளி கோரியிருப்பதாக ஐரோப்பிய வர்த்தகர்கள் வியாழக்கிழமை (ஜனவரி 18) அன்று கூறினர்.
வெள்ளைநிற அரிசி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தோனீசியா வர வகைசெய்யும் ஒப்பந்த விலைப்புள்ளியை ஜனவரி 29ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா, வியட்னாம், தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வரும் அரிசி ஏற்புடையதாக இருக்கும் என்றும் இந்தோனீசியா தெரிவித்துள்ளது.
இந்த அரிசி 5 விழுக்காடு உடைந்த அரிசித் தரத்தில், 2023/2024ஆம் ஆண்டு கால விளைச்சலில் அறுவடை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனீசியாவில் கடும் வறட்சி ஏற்பட்டதையடுத்து, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரிசி பயிரிட விவசாயிகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. அத்துடன், அது அரிசி இறக்குமதியையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
இவ்வாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தோனீசியாவின் அரிசி உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 46.3 விழுக்காடு குறையும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு எல்நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாகக் கூறப்படுகிறது.