கியவ்: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல மேற்கத்திய நாடுகளிடமிருந்து தற்காப்பு தொடர்பான உதவித் தொகுப்புகளை தான் எதிர்பார்ப்பதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி சனிக்கிழமை (ஜனவரி 20) அன்று தெரிவித்தார்.
“பங்காளி நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை தயார் செய்து வருகிறோம். அவை வலுவான இருதரப்பு ஒப்பந்தங்கள்,” என்று காணொளி வழி உரையாற்றிய ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திரு ஸெலன்ஸ்கி, “ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இது குறித்த முடிவு தெரியவரும் என்றும் அவற்றில் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன ” என்றும் விளக்கினார்.
பிப்ரவரி மாதம் 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரேன் மீது முழு அளவிலான தாக்குதலை மேற்கொண்ட நிலையில், உக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் ஒன்றுசேர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவ, மற்ற உதவிகளை வழங்கின.
ஆனால், போர் மூன்றாம் ஆண்டை நெருங்கும் நிலையிலும் போரில் கடந்த 12 மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலும் அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் உதவிக்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து நிதி, போர்க் கருவிகள் கிடைப்பது அண்மைய மாதங்களில் குறைந்து வந்துள்ளது.