டாக்கா: 2023ஆம் ஆண்டில் குறைந்தது 569 ரொஹிங்யா அகதிகள் மியன்மார், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கடலில் மூழ்கி மாண்டனர் அல்லது மாயமாகினர்.
கடலில் மூழ்கி மாண்ட ரொஹிங்யா அகதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவில் இதுவே ஆக அதிகம் என்று ஐக்கிய நாட்டு அகதிகள் பிரிவு ஜனவரி 23ஆம் தேதியன்று தெரிவித்தது.
2014ஆம் ஆண்டில் 730 ரொஹிங்யா அகதிகள் கடலில் மூழ்கி மாண்டனர்.
சிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்யா அகதிகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டு அகதிகள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 4,500 ரொஹிங்யா அகதிகள் அந்தமான் கடல் அல்லது வங்காள விரிகுடாவைக் கடக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடல்வழிப் பயணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தரும் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து உயிர் பிழைத்த ரொஹிங்யா அகதிகள் பகிர்ந்துகொண்டதாக ஐக்கிய நாட்டு அகதிகள் பிரிவு தெரிவித்தது.
கடல்வழிப் பயணத்தை மேற்கொள்ளும் ரொஹிங்யா அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள்.