ஜப்பானில் 36 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை

ஜப்பானில் 36 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை

1 mins read
7f35a1eb-850d-40cc-bb07-416113e82d8f
2019 ஜூலை 18ஆம் தேதி மூன்று மாடி கட்டடமான கியோடோ ஸ்டுடியோ தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற உயிரோவிய ஸ்டுடியோவில் தீ வைத்து 36 பேரை கொன்றதற்காக ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பொது ஊடகமான என்எச்கே இந்த விவரத்தை வியாழக்கிழமை (25 ஜனவரி) அன்று வெளியிட்டது.

கியோட்டோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘கியோஅனி’ மீது கொடூரமானத் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஜப்பான் முழுவதும் அதிர்ச்சியலை ஏற்பட்டது.

ஷின்ஜி அயோபாவுக்கு தற்போது 45 வயதாகிறது. ஸ்டுடியோ கட்டடத்தின் நுழைவாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இந்தச் சம்பவத்தில் 36 பேர் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயம் அடைந்தனர்.

அயோபாவுக்கும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. ஓராண்டுக்கு அவர் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

‘வயலட் எவர்கார்டன்’ உள்ளிட்ட பிரபல தொடர்களுக்கு பெயர்போன அந்த ஸ்டுடியோ மீது அயோபா வெறுப்பு கொண்டிருந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் தனது நாவலைத் திருடிவிட்டதாகவும் நம்பினார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை கியோஅனி மறுத்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி டிம் கூக் உள்ளிட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ஏழு நாடுகள் அடங்கிய ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள ஏழு நாடுகளில் ஜப்பான், அமெரிக்காவில் மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்