பெட்டாலிங் ஜெயா: நிலச்சரிவு அபாயம் அதிகமுள்ள இடங்களாக கேமரன் மலை, தாப்பா-கேமரன் மலை இடையிலான சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அங்குள்ள 31 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் என்று மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
1961ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை கேமரன் மலையில் மட்டுமே 418 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாக மலேசியாவின் தாதுப்பொருள், புவிசார் அறிவியல் துறையின் தலைமை இயக்குநர் ஸம்ரி ராம்லி கூறினார்.
அடையாளம் காணப்பட்டுள்ள 31 இடங்களில் அதே காலகட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இது 6.5 விழுக்காடாகும்.
1961ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை அந்த 31 இடங்களில் 6,431 நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
அவற்றின் விளைவாக 602 பேர் மாண்டனர்.
கோலா குபு- ரவுப் இடையிலான பாதை, தெமர்லோ, கோலா லிப்பிஸ், செரம்பான்-சிம்பாங் பெர்டாங் இடையிலான பாதை, ரெம்பாவ்-ஜொஹோல் இடையிலான பாதை, கோலாலம்பூர்-கராக் நெடுஞ்சாலை இடையிலான பாதை ஆகியவற்றிலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26ஆம் தேதியன்று கேமரன் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அதுவே கேமரன் மலையில் இவ்வாண்டு ஏற்பட்டிருக்கும் இரண்டாவது நிலச்சரிவு.
அதிகாலை 2.51 மணி அளவில் நிலச்சரிவு குறித்து தகவல் கிடைத்ததாக பாகாங் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையின் உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கனி கூறினார்.
மியன்மாரைச் சேர்ந்த ஐவர் வசித்து வந்த வீடு நிலச்சரிவில் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 26ஆம் தேதியன்று இரு ஆடவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
ஜனவரி 27ஆம் தேதியன்று மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட மற்ற இருவரைத் தேடும் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.