ஜெருசலேம்: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பு (யுஎன்ஆர்டபிள்யூஏ), நிதியுதவியை நிறுத்துவதாக ஒன்பது நாடுகள் வெளியிட்ட அறிவிப்பு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பின் ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அந்த நாடுகள் நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்தன.
இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்த அமைப்பின் தலைவர் பிலிப் லஸாரின், முடிவை மாற்றிக்கொள்ளும்படி அந்த நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிதியுதவியை நிறுத்துவது நிவாரணப் பணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் கூறினார்.
ஜனவரி 27ஆம் தேதி பிரிட்டன், இத்தாலி, ஃபின்லாந்து ஆகியவை இந்த அமைப்பிற்கான நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தன.
ஏற்கெனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகியவை நிதியுதவியை நிறுத்திவிட்டன. அக்டோபர் 7 தாக்குதலில் யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பின் 12 ஊழியர்கள் ஈடுபட்டதாக அவை கூறின.
இதுகுறித்து விசாரித்து வருவதாக அமைப்பு தெரிவித்தது. அந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டதாக அது கூறியது.
இத்தகைய குறைகூறல் யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பிற்கு எதிரான இஸ்ரேலின் பிரசாரம் என்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது.
நாடுகள் வழங்கிய நிதியாதரவை நிறுத்திக்கொள்வதால் அரசியல் ரீதியாகவும் நிவாரணப் பணிகளிலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் ஹுசைன் அல்-ஷேக் கூறியுள்ளார்.
உதவியை நிறுத்துவதாக அறிவித்த நாடுகள் உடனடியாக அவற்றின் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாட்டு நிவாரணப் பணி அமைப்பான யுஎன்ஆர்டபிள்யூஏ 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
காஸாவில் செயல்படும் ஆகப் பெரிய ஐநா அமைப்பான அது, பாலஸ்தீன அகதிகளுக்கு சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, இதர மனிதநேய உதவிகளை வழங்கி வருகிறது.