ஜோகூர் பாரு: சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவிற்கும் இடையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மலேசிய அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோகூர் சுற்றுப்பயண வழிகாட்டிகள் சங்கம் அதனைத் தெரிவித்தது.
சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் ஜோகூருக்கு வரும் சிங்கப்பூர்ப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சங்கத்தின் தலைவர் ஜிம்மி லியோங் கூறினார்.
உள்ளூர் வர்த்தகர்கர்கள் அதனால் நன்மையடைவர் என்பதையும் அவர் சுட்டினார்.
“சிங்கப்பூர்ப் பயணிகள் சீனப் புத்தாண்டுக்கு முன்னரே வரத் தொடங்குவர். அதனால் அதிகாரிகள் இப்போதே போக்குவரத்து நிலவரத்தைக் கண்காணிக்கத் தொடங்கியிருப்பர்.
“கார்களுக்கான தடத்தில் போக்குவரத்து சுமுகமாக இருந்தபோதிலும் பேருந்துத் தடத்தில் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது.
“சென்ற வாரயிறுதியிலிருந்து இதன் தொடர்பில் பலர் புகாரளித்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலகட்டங்களிலும் இதே சூழல் நிலவியது. எனவே மாநில அரசாங்கம் இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
சீனப் புத்தாண்டு நெருங்கும் வேளையில் சிங்கப்பூரர்களால் தற்போது ஜோகூரில் வர்த்தகம் சூடு பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் வெள்ளி வலுவடைந்திருப்பதும் இங்கு பொருள், சேவை வரி உயர்ந்திருப்பதும் இதற்குக் காரணங்களாகக் கருதப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக, குறிப்பாக வாரயிறுதிகளில் ஹோட்டல்களுக்கு விருந்தினர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக ஜோகூர் ஹோட்டல்களுக்கான மலேசிய சங்கம் கூறியது.
“சிங்கப்பூரர்கள் பலர் பொருள் வாங்கியவுடன் நாடு திரும்பினாலும் சிலர் ஜோகூரில் தங்கிச் செல்ல விரும்புவர். ஜோகூர் ஹோட்டல் கட்டணம் மலிவு என்பதும் இதற்குக் காரணம்,” என்று அது குறிப்பிட்டது.