ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து கிளம்பி சில நிமிடங்களே ஆன கேத்தே பசிபிக் விமானம் ஒன்றில் ‘வழக்கத்திற்கு மாறான நாற்றம்’ இருந்ததை அடுத்து அது பினாங்குக்குச் செல்லாமல் மீண்டும் ஹாங்காங்கிலேயே தரையிறங்கியது.
விமானம் ஜனவரி 28ஆம் தேதியன்று காலை 8.15 மணியளவில் ஹாங்காங்கிலிருந்து கிளம்பி, நண்பகல் 12 மணியளவில் பினாங்கை அடைவதாக இருந்தது என்று பேங்காங் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும், விமான அறையில் இருந்த நாற்றத்தால் விமானத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானி மீண்டும் திருப்பியதாகக் கூறப்படுகிறது.
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தைக் காலை 8.53 மணிக்கு விமானம் அடைந்த நிலையில், அதிலிருந்த பயணிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்தது.
பயணிகள் மீண்டும் நண்பகல் 12.30 மணிக்கு மற்றொரு விமானத்தில் பினாங்கை நோக்கிச் செல்ல முடிந்ததாக அறியப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட விமானம் முழுமையாகச் சோதனையிடப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது.